கல்முனைப் பிரச்சினை என்ன என்ற தெளிவான விளக்கத்தை பாராளுமன்றில் இன்னும் வழங்கவில்லை : வை.எல்.எஸ். ஹமீட்

முழுமையான பிரதேச செயலகமாக உள்ள கல்முனை நகரை கூறுபோட்டு அதன் பிரதான பாதியை கல்முனை வடக்கு என்று அழைக்கப்படுகின்ற பாண்டிருப்பு – சேனைக்குடியிருப்புக்காக கோரப்படுகின்ற பிரதேச செயலகத்தோடு இணைக்க கோருவதையே முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்ற விவரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் நாடாளுமன்ற பேச்சுக்கான பதிலாக நாடாளுமன்றத்தில் வழங்கத்தயாரான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் யார்? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றே ஓர் கணக்காளரை நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மிக ஆக்ரோஷமாக நாடாளுமன்றில் திங்கட்கிழமை பேசினார்.

கல்முனை வடக்கு என்றொரு பிரதேச செயலகம் இல்லை. கல்முனையில் உப பிரதேச செயலகமே இருக்கிறது. அதனைப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த ஆட்சேபனையுமில்லை. ஆனாலும் கல்முனை நகரைக் கூறுபோட்டு அதன் பிரதான பாதியை கல்முனை வடக்கு என்று கோரப்படுகின்ற பிரதேச செயலகமாகக் கோருவதையே முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் கல்முனைப் பிரதேச செயலகப் பிரச்சினையை சொல்லியே வாக்குப் பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது கட்சித் தலைவர்களும் இன்றுவரை கல்முனைப் பிரச்சினை என்ன? என்றொரு தெளிவான விளக்கத்தை நாடாளுமன்றில் வழங்கவில்லை.

கல்முனைப் பிரச்சினை தொடர கல்முனை வாக்காளர்களே காரணம். கல்முனை முஸ்லிம்கள் தலையில் கைவைக்க முன் விழித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.