இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பை நீக்கவேண்டும்: உருத்ரகுமாரன்

இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பை நீக்கவேண்டும் என கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி உருத்ரகுமாரன், இது தொடர்பிலான விண்ணப்ப கடிதத்தை இந்திய உள்துறை அமைச்சுக்கு அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதம் கடந்த மார்ச் 8 ஆம் திகதியன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஏன் இந்தியாவின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்கான நியாயங்கள் கூறப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்து வருவதாக உருத்ரகுமாரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பணியாற்றுவதில் சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்த விண்ணப்பக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நிபுணரின் அறிவிப்புகளின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகள் தற்போது எந்தவொரு நிறுவன கட்டமைப்பான அமைப்பையும், எந்தவொரு நிறுவன கட்டமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான காரணமாக, பிராந்தியத்துக்கும் இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கும் அச்சுறுத்தல் என்ற விடயத்தை இந்தியா, வலியுறுத்தி வருகின்றபோதும், அதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது மனுவில் மறுத்துள்ளது.

இந்தநிலையில், தமிழ்மக்களின் அபிலாஷைகளை முன்னெடுக்க இந்தியாவின் இராஜந்திர உதவி அவசியம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை, இந்திய மக்களின் ஒருமைப்பாட்டையும், பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.

அத்துடன், தமிழீழம் இந்தியாவுடன் சிறப்பான உறவை கொண்டிருக்கும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.