பாதுகாப்பு அமைச்சின் இணையம் உட்பட இரு இணையத்தளங்களுக்குள் ஊடுருவல்! முக்கிய தகவல்கள் பறிபோயுள்ளனவாம்

அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக்செய்யப்பட்டுள்ளன எனவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும ;இரகசியமான தகவல்கள் ஹக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஹக் செய்யப்பட்டு அதில் காணப்பட்ட விவரங்கள் ஹக்கர் குழுவொன்றுக்கு விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கொன் பீட்ஸ் தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் உட்பட தனிப்பட்ட ரீதியில் அடையாளம் காணப்படக்கூடிய தகவல்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தரவு முகவர் கெவின் செக்கியுரிட்டி என்ற குழுவே இதனைச் செய்துள்ளது. ஹக்கர் குழு என தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தக் குழுவினர், கொலம்பியா, மெக்சிக்கோ, சிலி ஆகிய நாடுகளில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பாக டெய்லி மிரர் தொடர்புகொண்டவேளை பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் நளின் ஹேரத் இதனை நிராகரித்துள்ளதுடன் எந்த தகவல்களும் பறிபோகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இணையத்தளத்தின் எந்த தரவும் விற்பனைக்காக வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஹக் செய்யப்படுவதாக எங்களுக்கு ஆரம்பத்தில் தகவல் கிடைத்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்க தூதரகம் எங்களுக்கு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக நாங்கள் மிகவும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இதன் காரணமாக எவராலும் அதற்குள் ஊடுருவ முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு கணிணி அவசரநிலை தயார் குழு மற்றும் விமானப்படையின் சைபர் நடவடிக்கை நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் இதனை முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.