அரசாங்கம் கொடுக்கின்ற மானியங்களைப் பிரித்துக் கொடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர் என்ற அதிகாரம் தேவையில்லை…பா.உ கோ.கருணாகரம் ஜனா

(சுமன்)

இராஜாங்க அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் மேய்ச்சற்தரையைக் காப்பாற்றுங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் பறிபோய்க் கொண்டிருக்கும் காணிகளைக் காப்பாற்றுங்கள், சோளார் திட்டத்திற்காக அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 280 ஏக்கர் வேளாண்மைக் காணியைக் காப்பாற்றி அந்த மக்களுக்கு வழங்குங்கள், வாகரை பிரதான வீதியை நிறைவுறுத்துங்கள் அதேபோன்று முடிக்கப்படாதுள்ள பொதுநூலக வேலையை நிவாத்தி செய்யுங்கள். உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியது இதற்காகவே ஒழிய அரசாங்கம் கொடுக்கின்ற மானியங்களை பிரித்துக் கொடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் என்ற அதிகாரம் தேவையில்லை. அதனை அரச அதிகாரிகள் நேர்த்தியாகச் செய்வார்கள். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்

இன்றைய தினம் மட்டக்களபப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடக்குமோ நடக்காதோ என்ற எண்ணப்பாட்டுடன் ஒத்திப் போடப்பட்டு மீண்டும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தத் திகதியில் கூட நடாத்தபடக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் மாத்திரல்லாமல், அரச அதிகாரிகள், தேர்தல்கள் ஆணையகத்திற்குக் கூட இருக்கின்றது. அந்த சந்தேகத்துடனேயே திகதியும் அறிவிக்கப்பட்டிருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாட்டிலே தேர்தல்கள் ஒத்திப்போடப்படடுவதென்பது யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. எதிர்வரும் 28 தொடக்கம் 01ம் திகதி வரை தபால்மூல வாக்கெடுப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் 15ம் திகதிக்கிடையில் பணம் தரப்பாடவிட்டால் குறிப்பிட்ட திகதிக்குள் வாக்குச்சீட்டுகளை அடித்துக் கொடுக்க முடியாது என்று அரச அச்சகர் தெரிவித்திருக்கின்றார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது உண்மையில் இந்த அதிகாரிகளும் அரசாங்கமும், நாட்டின் ஜனாதிபதியும் ஏற்கனவே நொந்துபோயுள்ள மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவே இருக்கின்றது.

தற்போது இந்த நாட்டிலே ஜனநாயகப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அரசியற் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் எனப் பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களை இரும்புக் கரம்கொண்டு அரசாங்கம் அடக்கிக் கொண்டு வருகின்றது.

“கடும் முறுக்குத் தெறிக்கும்” என்று சொல்லுவார்கள். இந்தப் போராட்ங்;களை கடுமையாக அடக்கினால் எதிர்கால விளைவுகள் பாரதூரமாக இருக்கும். கடந்த காலங்களிலே தமிழ் மக்களின் அகிம்சை ரீதியான போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய காரணத்தினாலேயே ஆயுதப் போராட்டம் வெடித்தது. அவ்வாறானதொரு நிலைமைக்கு மீண்டும் இந்த நாட்டை அரசு கொண்டு செல்லக் கூடாது என்பது எமது பணிவான வேண்டுகோள்.

தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடக்கவிருப்பதாக வேட்பாளர்களும் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போது அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதம் அரசியலமைப்பிற்கும், தேர்தல் சட்ட விதிகளுக்கும் முரணாகவே இருக்கின்றது.

கடந்த வாரம் முதல் அகில இலங்கை ரீதியாக மானியங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சமூர்த்திப் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பத்து கிலோ அரிசி வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் பயனாளிகளுக்கு அரசிகள் வழங்கப்பட்டன. அந்த வேளையிலே இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அவர்கள் பல இடங்களிலே அந்த அரசு கொடுக்கும் மானியத்தை தன்னுடைய கைகளால் தனது கட்சி ஆரதரவாளாகளின் துணையுடன், அரச அதிபர் உட்பட அரச அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு வழங்கியது தேர்தல் முறைக்கு மாறானது மாத்திரமல்லாமல் அப்போது இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரால் தேர்தல் ஆணையகத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து தான் இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் எனவும், தன்னுடைய அதிகாரத்திற்கு யாரும் பங்கம் விளைவிக்கக் கூடாது, தன்னுடைய அதிகாரத்தின் அடிப்படையில் தான் நினைத்ததைச் செய்வேன் என்ற தோரணையில் அங்கு உரையாற்றியும் இருந்தார்.

ஒரு இராஜாங்க அமைச்சர் என்றால் இலங்கை முழுவதும் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் மானியத்தைப் பகிர்ந்து கொடுப்பது அவரது அதிகாரம் அல்ல. அதனை அரச அதிகாரிகள் நேர்த்தியாகச் செய்வார்கள். ஒரு அரச தரப்பில் இருக்கும் இராஜாங்க அமைச்சர் என்றால் இந்த மாவட்டத்திலே செய்யக் கூடிய நிறைய வேலைகள் இருக்கின்றன.

எமது காணிகள் பறிபோய்க் கொண்டிருக்;கின்றன. செய்யப்பட்ட வேலைகள் பல அறைகுறையில் இருக்கின்றன. தற்போதை சூழ்நிலையிலே 99.5 வீPதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் எமது மக்களின் ஜீவனோபாயத் தொழில்களிலும் அவர்கள் கைவைத்துள்ளார். அந்த வகையில் எமது மேய்ச்சற் தரைப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டு செல்கின்றன. சேனைப் பயிர்ச் செய்கை என்ற தேரணையில் மயிலத்தமடு, மாதவணை போன்ற பல மேய்ச்சற்தரைப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு எமது கால்நடை வளர்ப்பாளர்கள் பல வழிகளிலும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோன்ற கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வாகனேரி பிரதேசத்தில் சாம்பல் குளம் என்ற இடத்தில் சுமார் 350 ஏக்கர் நிலத்தை ஒரு சோளார் நிறுவனத்திற்கு மாகாவலி அபிவிருத்தி திணைக்களமும், வனவளத் திணைக்களமும் ஒதுக்கிக் கொடுப்பதாகக் கூறி அந்த விடயத்திற்கு பிரதேச செயலாளர் உட்பட பல அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்தார்கள். அந்த 350 ஏக்கர் காணியில் 280 ஏக்கர்கள் விவசாயக் காணிகளாக இருக்கின்றது.

அதேபோன்று வாகரை பிரதான வீதி மிக மோசமாக இருக்கின்றது. இதே பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது தொடங்கி வைத்த பொதுநூலகக் கட்டிடம் அறைகுறையிலே இருக்கின்றது. உண்மையிலே இராஜாங்க அமைச்சர் என்ற தோரணையில் தன்னுடைய அதிகாங்களைப் பயன்படுத்த வேண்டுமானால் இந்த விடயங்களில் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் மேய்ச்சற்தரையைக் காப்பாற்றுங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் பறிபோய்க் கொண்டிருக்கும் காணிகளைக் காப்பாற்றுங்கள், சோளார் திட்டத்திற்காக அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 280 ஏக்கர் வேளாண்மைக் காணியைக் காப்பாற்றி அந்த மக்களுக்கு வழங்குங்கள், வாகரை பிரதான வீதியை நிறைவுறுத்துங்கள் அதேபோன்று முடிக்கப்படாதுள்ள பொதுநூலக வேலையை நிவாத்தி செய்யுங்கள் இதுதான் உங்கள் கடமை. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியது இதற்காகவே ஒழிய அரசாங்கம் கொடுக்கின்ற மானியங்களை பிரித்துக் கொடுப்பதற்கு உங்கள் சேவை தேவையில்லை.

அதேபோன்று மற்றைய இராஜாங்க அமைச்சர் காணிக் கொள்ளைகளுக்கு எதிராகப் போராடுவதற்காக ஊர்வலம் செல்லப் போவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் இருவரும் அரசங்கத்துடன் இணைந்து இராஜாங்க அமைச்சர்களாக இருப்பதை விடுத்து உங்களால் முடியாவிட்டால் எதிர்க்கட்சியில் இருந்து உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.