வன்னியில் புனித பாறையை இடிக்க அரசாங்கம் அனுமதி: மக்கள் கடும் எதிர்ப்பு

வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்குக் கருங்கல் அகழ்விற்குப் பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாறையில் முன்னெடுக்கப்படவுள்ள கருங்கல் அகழ்வை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

அந்தப் பாறையின் உச்சியில் அந்தப் பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே பிள்ளையாரை வழிபட்டு வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைக்குப் பின்னர் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் பிரதேச சபைத் தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8 ஆம் திகதி அந்த இடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே வழிபட்டு வந்த கல் தூண் தற்போது இல்லாமல் போயுள்ளன எனவும், எனினும் அண்மையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாறை ஒரு வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகார சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பிரதேச வாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகாரசபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளைப் பலவந்தமாகக் கையகப்படுத்துவதாகத் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.