கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கான முன்னாயத்த கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கான முன்னாயத்த கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பதில் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது, போதைப்பொருள் பாவனை அதிகரித்தமை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் போதைப் பொருள் பாவனையினை தடுப்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றை துறைசார்ந்த அதிகாரிகளை உள்ளடக்கி அடுத்த இரு வாரத்தினுள் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை நீர்ப்பாசனம், போக்குவரத்து, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், கல்வி, சிவில் நிர்வாகம், காணி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான பொதுவான விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.