பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது

(அந்துவன்)

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது.

அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் இணைந்தே பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

நியாயமற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்தாக்கம் மலையக பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தூர பகுதிகளில், தூர பிரதேசங்களில் உள்ள தோட்டங்களில் இருந்து பிரதான மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைபெற வந்த மக்கள் இன்னல்களை எதிர்கொண்டனர்.  ஏமாற்றத்துடன் வலிகளை சுமந்தவாறு வீடுகள் நோக்கி பயணிப்பதை காண முடிந்தது.

சில நோயாளிகள் போராட்டத்தல் ஈடுபட்டவர்களை கடுமையா சாடியதுடன், மேலும் சிலர் அரசுமீது சொற்கணைகளைத் தொடுத்தனர்.

அதேவேளை, பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒருசில மாணவர்கள் திரும்பிச்சென்றனர்.

மலையக பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும் பணிகள் இடம்பெறவில்லை. அரச வங்கிகள் உட்பட பல துறையினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.