நலன்புரிக் கொடுப்பனவிற்கான 11 இலட்சம் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவு – ஷெஹான் சேமசிங்க

நலன்புரிக் கொடுப்பனவுக்கான 11 லட்சம் விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் 31 ஆம் முன் சரியான தகவல்களை வழங்கி பயன்களை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 லட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 37 லட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தகுதி சரிபார்த்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

பரிசீலிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அதிகளவானவை களுத்துறை மாவட்டத்துக்குரியவை எனவும் அது, 46 சதவீதம் என்று குறிப்பிட்ட அமைச்சர், பதுளை மாவட்டத்தில் 34 சதவீதமும் , காலி மாவட்டத்தில் 32 சதவீதம் என்ற அடிப்படையில் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் இந்த 11 லட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தகவல் கணக்கெடுப்பு, இம்மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதால், தகவல் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு சரியான தரவுகளை விரைவில் வழங்குமாறு அனைத்து விண்ணப்பதாரிகளையும் இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.

அத்தோடு உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரிகள், நலன்புரிச் சலுகைகளை இழக்க நேரிடும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.