லிஸ்டீரியா நோயால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா நோயால் உயிரிழந்துள்ளார்.

சுகாதாரத்துறையால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்ட, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை, ஆரம்ப பரிசோதனைகளில் உறுதியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்ததாக, சமூக வலைதளங்களில் வெளியான தகவலை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ முன்னதாக தெரிவித்திருந்தார்.

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரும், யாத்திரையில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவரும், வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சமூக வைத்திய நிபுணர் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா, இது தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமையால், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.