மக்களுக்கு சுமையாகவுள்ள நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தவறென்ன ? – நிதி இராஜாங்க அமைச்சர் கேள்வி

நட்டமடையும் 52 அரச நிறுவனங்கள் கடந்த ஆண்டு மாத்திரம் 80 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளன. ஒட்டுமொத்த மக்களுக்கும் சுமையாக உள்ள நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தவறென்ன உள்ளது.

நடைமுறைக்குத் தேவையான தீர்மானங்களைத் தற்போது எடுக்காவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டதன் பின்னரே பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் துரிதப்படுத்த வேண்டும். நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் எடுக்கப்பட்டது.

சர்வதேச பணிக்குழாம் நிபந்தனைகளுக்கு அமைய கடன் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் அரச வருமானம் மற்றும் அரச செலவு ஆகியவற்றுக்கு இடையிலான பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்வது பிரதான பிரச்சினையாக இருந்தது. மறுபுறம் வங்குரோத்து நிலை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தோம்.

இவ்விரு காரணிகளால் தான் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்குத் தாமதமானது.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் 33 கோடி டொலர் இந்த மாதத்திற்குள் கிடைக்கப் பெறும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்களை எதிர்வரும் ஆண்டு ஆட்சிக்கு வரும் புதிய அரசாங்கம் மாற்றியமைத்ததால் மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நான்கு ஆண்டு காலத்துக்கு மட்டுப்படுத்த முடியாது.

நட்டமடையும் அரச நிறுவனங்களால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஸ்ரீலங்கன் விமான சேவையை நிச்சயம் மறுசீரமைக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஒருமுறை ஊடாக விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் கூட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவன நட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நட்டமடையும் 52 அரச நிறுவனங்கள் கடந்த ஆண்டு மாத்திரம் 800 பில்லியன ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஆகிய மூன்று பிரதான நிறுவனங்களின் நட்டம் 95 சதவீதமாகக் காணப்படுகிறது.

இந்த நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தவறென்ன உள்ளது. நடைமுறைக்குச் சாத்தியமான தீர்மானங்களைத் தற்போது எடுக்காவிடின் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.

அரச நிறுவனம் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சுயமாக நிதி திரட்டிக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணயம் குறிப்பிடுவதில் தவறேதும் இல்லை. இந்த நிபந்தனை இலங்கைக்கு மாத்திரமல்ல, ஏனைய நாடுகளுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பு. இதுவரை காலமும் நிதி விவகாரம் முறையற்ற வகையில் முன்னெடுக்கப்பட்ட காரணத்தால் தான் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது, ஆகவே, வெகுவிரைவில் ஊழல் ஒழிப்பு சட்டம் இயற்றப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.