தேர்தல் குறித்து தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்கள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன – ஜனக வகும்பர

தேர்தல் நடவடிக்கைகள் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முதலில் அனைவரும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும், என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்பர தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தலையிடவில்லை.

தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு துறைசார் தரப்பினருடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும், ஆனால் அவ்வாறு பேச்சுகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு, பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழு பேச்சுகளை மேற்கொள்ளவில்லை. தன்னிச்சையான முறையில் எடுத்த தீர்மானங்கள் இன்று துறைசார் மட்டத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன.

தேர்தல் நடவடிக்கைகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தேவையான எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் திகதி அறிவிப்பை விடுக்க முன்னர் ஆணைக்குழு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் பேச்சுகளை மேற்கொண்டிருந்தால் முரண்பாடுகள் தோற்றம் பெற்றிருக்கா.

தேர்தல் தொடர்பில் முதலில் சகல தரப்பினரும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும், ஆகவே தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிவித்த தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே தேர்தலை நடத்த முடியும்.

காலி மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தை தவிர ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறும்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களிடம் பொறுப்பாக்கப்படும்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சகல மாகாண ஆளுநர்களுக்கும் விசேட பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சிமன்றங்களால் புனரமைப்பு பணிகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும், நிர்வாகக் கட்டமைப்பில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறா. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.