நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் – ஐக்கிய தேசிய கட்சி

அரசமைப்பிற்கமைய எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு காணப்படுகிறது.

தற்போதைய நிலைமையில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலால் அன்றி வேறு எந்த தேர்தல்களாலும் எவ்வித மாற்றமும் இடம்பெறப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள சர்வதேச வெற்றியை ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் ஊடாக சீர்குலைத்து காலை வாராமல் இருந்தால் வெற்றிப்பாதையில் முன்னோக்கிப் பயணிக்க முடியும்.

உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடிக்குமளவிற்கு ஜனாதிபதி நாட்டை முன்னேற்றுவார். எனவே, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

நாணய நிதியத்தின் அறிவிப்பினையடுத்து மேலும் பன் மடங்கு ஒத்துழைப்புக்கள் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறவுள்ளன. 9 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை பணம் அனுப்ப வேண்டாம் என்று ஜே.வி.பி. கூறினாலும், ஜனாதிபதி மீது கொண்ட நம்பிக்கையால் பெப்ரவரியில் 475 – 500 மில்லியன் டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலினாலோ அல்லது மாகாணசபைத் தேர்தலினாலோ இது போன்ற எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அரசமைப்பிற்கமைய எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடைக்கப்பெறும்.

அதன் அடிப்படையில் பொருத்தமான தீர்மானங்கள் அவரால் எடுக்கப்படும். ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலைத் தவிர வேறு எவற்றினாலும் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.