காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் – எஸ்.சிறிதரன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா இலங்கைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இலங்கையில் தான் தமிழர்கள், நிலங்கள், ஆணைக்குழுக்கள், முறைமைகள் காணாமலாக்கப்படும், காணாமலாக்கப்படுவதற்கு பரிசில் வழங்கப்படுமாயின் இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத்தினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினது உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை காணாமலாக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தான் தமிழர்கள் காணாமலாக்கப்படுவார்கள், தமிழ்களின் நிலங்கள் காணாமலாக்கப்படும், ஆணைக்குழுக்கள் மற்றும் அரசமைப்பால் உருவாக்கப்பட்ட முறைமைகள் காணாமலாக்கப்படும். காணாமலாக்கப்படுதலுக்கு பரிசு வழங்க வேண்டுமாயின் இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும்.

சிங்கள பேரீனவாதத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்மங்களால் பல ஆண்டுகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் எமது உறவுகளின் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றன.

நெடுந்தீவு பகுதியில் வலுக்கட்டாயமான முறையில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. மறுபுறம் சிங்கள மக்கள் வாழாத நாவற்குழி பகுதியில் பௌத்த விகாரையை முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா திறந்து வைக்கிறார். அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

தமிழ்களின் தொன்மையை பறைசாற்றும் குருந்தூர் மலை, வெடுக்குநாரி ஆகிய வரலாற்ற சிறப்புமிக்க தலங்களில் புத்தர் தோற்றமடைந்துள்ளார். இந்த நாடு எதை நோக்கிச் செல்கிறது? யுத்தம் முடிவடைந்த பின்னரும் எம் உறவுகள் நிம்மதியாக வாழ முடியாமல் தொடர்ந்து உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்.

தமிழ்களின் காணிகள் இன்றும் படையினர் கைவசம் உள்ளது. சொந்த நிலங்களை படையினரிடம் விட்டுக் கொடுத்து விட்டு தமிழர்கள் வீதியில் நிற்கிறார்கள். தமது விளைநிலங்களை கண்ணீரோடு பார்த்து மன்றாடுகிறார்கள். ஏன் இந்த கொடுமை, அவரவர் உரிமைகளை அவவருக்கு வழங்குவதை ஏன் தடுக்கின்றீர்கள்?

அற்ப சொற்ப அதிகாரங்களைக் கொண்டிருந்த மாகாண சபை முறைமை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது. தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுகிறது.

யுத்த காலத்தில் தமிழர்களைக் கொலை செய்வதற்கு சிங்களப் படைகளுக்கு ஆயுதம் வழங்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தற்போது ஏன் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில்லை.

இந்திய அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாகவே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது, ஆகவே, மாகாண சபை தேர்தலை நடத்த இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.இல்லாத ஒன்றைக் கேட்கவில்லை, அரசமைப்பில் இருப்பதைக் கேட்கிறோம், ஆகவே தற்துணிவு இருந்தால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.