மட்டு. கடற்தொழிலார்களின் வயிற்றில் அடிக்கும் டக்ளஸ்! பொதுமக்கள் விசனம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களது உயிரை பணயம் வைத்து தினம் தினம் இரவு பகல் பாராது கடலுக்குச் சென்று தொழில்செய்து வரும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கடல் அட்டை பிடித்து வரும் கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை பாவித்து கடற்தொழிலாளர்கள் அல்லாத சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் அனுமதி பத்திரம் வழங்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடற்தொழிலில் அனுபவம் இல்லாதவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்களமும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் எனக் கூறும் சிலருக்கு குறித்த அனுமதி பத்திரங்கள் வழங்கியுள்ளமை கடலை நம்பி வாழ்கின்ற கடற்தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்தொழிலாளர்கள் நாரா நிறுவனத்துடன் பதிவு செய்து 2013 ஆம் ஆண்டு முதல் சட்டரீதியாகவே மேற்படி தொழிலை செய்து வருகின்றனர்.

அனுமதி பத்திரத்தில் பகலில் மட்டும் தொழில் செய்யலாம் என்ற நிபந்தனை அடிப்படையில் இருக்கின்ற காரணத்தால் பகல் நேரம் மாத்திரமே கடற்தொழிலாளர்கள் செய்துவந்தபோதிலும் டக்ளஸ் தேவானந்தாவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இரவு நேரத்திலும் அட்டைத் தொழில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கடலை நம்பி வாழ்கின்ற கடற்தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

மேற்படி அமைச்சரின் நடவடிக்கை காரணமாக கடற்தொழிலை நம்பி வாழ்கின்ற கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200 இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தொழிலை இழந்து காணப்படுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை காலமும் நேர்த்தியாக இந்த கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி வந்த மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரி மற்றும் மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் தாங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தா மீது வடக்கு கிழக்கு கடற்தொழிலாளர்கள் பல விமர்சனங்களை முன்வைத்து கொண்டு வருகின்ற நிலையிலும் தற்போது ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கையில் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றமை கடற்தொழிலாளர்கள் மத்தியில் கடும் விரக்தியை உண்டு பண்ணியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு மட்டக்களப்பு கடற்தொழில் திணைக்களமும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் உடன் நடவடிக்கை எடுத்துத் தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.