தேர்தல் பிற்போடப்பட்டமைக்கும் எதிர்க்கட்சிக்கும் தொடர்பில்லை! நாலக கொடஹேவா ஆணித்தரக் கருத்து

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடும் தீர்மானத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

தேர்தலை விரைவாக நடத்துமாறு சகல எதிர்க்கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வலியுறுத்திய போது தேர்தலுக்கு முரணான கருத்துக்களை மாத்திரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி முன்வைத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சகல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டப்பட்டது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றமை அடிப்படையற்றது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவை மதிக்காமல் அரசாங்கம் குறிப்பாக நிதியமைச்சு செயற்படுகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு ஏற்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஆணைக்குழுவின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வலியுறுத்தினோம்.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஆணைக்குழு குறிப்பிட்டது. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை நிதியமைச்சு சுற்றறிக்கையால் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற பேச்சின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவாக நடத்துமாறு சகல எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திய போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரம் தேர்தலுக்கு எதிரான கருத்துக்களை முன்வவைத்தது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும், தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைக்க ஆளும் தரப்பினர் தீர்மானித்துள்ளனர். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.