நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது! தாரக பாலசூரிய கருத்து

பொருளாதார மீட்சிக்கான பாதையை மாத்திரம் சர்வதேச நாணய நிதியம் காண்பித்துள்ளது, தற்போது இலாபமடைவதற்காக காலம் காலமாக நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது.

தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும் என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியுதவி கிடைத்தைத் தொடர்ந்து பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடவில்லை. பொருளாதார மீட்சிக்கான பாதையை மாத்திரம் சர்வதேச நாணய நிதியம் காண்பித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ள 10 பிரதான நிபந்தனைகளை தாராளமாக நிறைவேற்றலாம்.

நாட்டுக்கு பொருத்தமான சிறந்த நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கடுமையாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டவுடன் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். காலம் காலமாக இவ்வாறான போராட்டங்களால் தேசிய வளங்களின் உச்ச பயனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைக்கும் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் போது அதனை தேசத்துரோக செயற்பாடு என குறிப்பிட்டுக் கொண்டு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும், இவ்வாறான போராட்டங்களால் முன்னேற்றமடைய முடியாத நிலை காணப்படுகிறது.

தற்போது இலாபமடையும் காரணத்துக்காக பெற்றோலிய கூட்டுத்தாபனம்,டெலிகொம் ஆகிய நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது. ஏனெனில் இந்த நிறுவனங்களை காலம் காலமாக நட்டமடைந்துள்ளன. ஆகவே, நிலையான மாற்றத்துக்கு நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.