சித்திரைப் புத்தாண்டை நாட்டு மக்கள் மிகவும் சந்தோசமாக கொண்டாடலாம் – நளின் பெர்னாண்டோ

நாட்டு மக்கள் தமிழ் – சிங்கள புத்தாண்டை இம்முறை சந்தோசமாக கொண்டாடலாம். காலி முகத்திடலில் கொண்டாட வேண்டிய தேவையில்லை.

அத்தியாவசிய பொருளகளின் விலை குறைப்பு தொடர்பில் ஒன்றிணைந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்போம் என வர்த்தக துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது டொலர் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இறக்குமதி செய்யப்படும் 1464 அத்தியாவசியமற்ற பொருள்கள் மீது மட்டுப்பாடு விதிக்கப்பட்டன.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களால் நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. ஆகவே இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான மட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.

இதற்கமைய நாட்டு மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு கடந்த செப்ரெம்பர் மாதம் 708 பொருள்கள், நவம்பர் மாதம் 62 பொருள்கள் மற்றும் டிசெம்பர் மாதம் 09 பொருள்கள் மீதான இறக்குமதி மட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

வெகுவிரைவில் 689 பொருள்கள் மீதான மட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.பொருளாதார மேம்பாட்டின் பலனை நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுப்போம்.

2022 ஆம் ஆண்டு தமிழ்- சிங்கள புத்தாண்டை மக்கள் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் கொண்டாடினார்கள். நாட்டின் அவலநிலையை மக்கள் மாறுபட்ட விதத்தில் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டினார்கள், ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது.

எரிபொருள் ,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவடைந்துள்ளது, ஆகவே நாட்டு மக்கள் இம்முறை தமிழ்- சிங்கள புத்தாண்டை சந்தோசமாகக் கொண்டாடலாம். மின்கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. ஏதாவதொரு வழிமுறையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும்.

பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கம் கட்டம் கட்டமாகக் குறைவடைந்து செல்கிறது. பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது, ஆகவே பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கம் வெகுவிரைவில் ஒற்றை இலக்கத்துக்கு ஸ்தீரப்படுத்தப்படும். – என்றார்.

இதன்போது எழுந்து குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான், அத்தியாவசிய பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமை மகிழ்வுக்குரியது. ஆனால் விலை குறைப்பு சந்தையில் சாத்தியமற்றதாக உள்ளது.

வியாபாரிகள் பழைய விலைக்குத் தான் பொருள்களை விற்கிறார்கள், ஆகவே பொருள்கள் விலை தொடர்பில் வினைத்திறனான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். – என்றார்.

இதற்கு பதலளித்த வர்த்தகத்துறை அமைச்சர் மூலப் பொருள்களின் உயர்வடையும் போது அத்தியாவசிய பொருள்களின் விலையை வர்த்தகர்கள் அதிகரிக்கிறார்கள், ஆனால் விலை குறையும் போது விலை குறைப்பை அமுல்படுத்துவதில்லை, இது காலம் காலமாக காணப்படும் பிரச்சினைதான்.

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்பில் ஆராய நுகர்வோர் அதிகார சபை மற்றும் உணவு பாதுகாப்பு திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட செயற்திட்டத்தை அமுல்படுத்துவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.