மனித உரிமைகள் என்றால் என்ன என்பதை அறிந்தவர்களை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்

மனிதஉரிமைகள் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டவர்களை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் எனஆணைக்குழுவின் தலைவர் ரோகிணி மாரசிங்க கருத்துவெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் குறித்து சிறிதளவும் அறிவில்லாதவர்களை இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமித்தமை நாட்டின் மனித உரிமை நிலவரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களிற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

மனித உரிமைகள் குறித்து எந்த புரிந்துணர்வும் இல்லாதவர்களை நியமித்தமையே இந்த பிரச்சினைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் குறித்து சிறந்த புரிந்துணர்வு கொண்டவர்களை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் என நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ள ரோகிணி மாரசிங்க அவ்வாறான நியமனங்களை மேற்கொள்ளாத பட்சத்திலேயே இவ்வாறான குழப்பநிலை ஏற்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஆணையாளர்களிற்கும் மனித உரிமைகள் குறித்து எதுவும் தெரியாது அவர்கள் கூட்டங்களிற்கு கூட சமூகமளிப்பதில்லை,அவர்கள் எதுவும் செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் பணியாளர்களிடம் அவர்கள் குறித்து கேட்கவேண்டும் அவர்கள் அனைத்து விடயங்களையும் தெரிவிப்பார்கள் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.