பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகளை சந்தித்த ரெலோவின் கருணாகரன் எம்.பி!

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிளுக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்குமான (ரெலோ) சந்திப்பு லண்டனில் உள்ள வெளிவிவகார அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கையில் இருந்து சென்றிருந்த ரெலோ செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் (ஜனா) மற்றும் பிரித்தானியக் கிளையின் தலைவர் சாம் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தில் உள்வாங்க வேண்டிய பல முக்கிய விடயங்கள், பயங்கரவாதத் தடைசட்டம், தொடர்ச்சியான நில அபகரிப்பு தொல்பொருள், வன இலாகா, பாதுகாப்பு அமைச்சு ஊடாக வடக்கு கிழக்கில் தமிழ் இனத்தின் இனபரம்பலைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகள், கடந்த நான்கு வருடங்களாகத் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யபடும் மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல், தனது அரசியல் அமைப்பையே மீறிச் செயற்படும் அரசின் செயற்பாடுகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 72 வருடங்களாக இழுத்தடிப்பு செய்யப்படும் தமிழ் இனப்பிரச்சினை, 12 வருடங்களாக எதையுமே அமுல்படுத்தாத யு.என்.எச்.சி.ஆர். தீர்மானங்கள், 16 தடவைகள் ஐ.எம்.எவ். பரிந்துரைகள் எதையுமே நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் 17 ஆவது தடவையாக ஐ.எம்.எவ். கையேந்தும் நிலைக்குச் சென்ற அரசின் தவறான கொள்கைகளைச் சுட்டிக்காட்டி இவ்வாறான ஓர் அரசுடன் மூன்றாவது தரப்பு மத்தியஸ்தம் இன்றி அரசியல் தீர்வுக்கான சாத்தியமான அறிகுறிகள் இல்லையெனவும் பிரித்தானியாவை இந்தியாவுடன் இணைந்து இலங்கையில் தமிழ் இனத்திற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்விற்கான அழுத்தம் கொடுக்கப் படவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் கொந்தளிப்பான நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடையமுடியாது என்றும், நாட்டின் வளர்ச்சிக்குப் பதிலாகக் கிளர்ச்சியை அடக்கவே சர்வதேச நிதிகளை அரசு இயந்திரம் பாவிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.