இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டாம் – இந்தியாவிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான மையத்தின் தேசிய அமைப்பாளர் சூழளியலாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வனவிலங்கு மற்றும் தாவரவியல் சட்டத்தை மீறி அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சீனாவுக்கு குரங்குகளை வழங்கும் விவகாரத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான கலாசார பிணைப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும்.

ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் வாழ்ந்த குரங்களிலிருந்து பிரிந்து வந்ததன் காரணமாக இலங்கையிலுள்ள குரங்குகள் உலகிலேயே பழமை மிக்க குரங்குகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இலங்கையின் பரிணாம வளர்ச்சியில் அழிந்து போன 3 குரங்கு இனங்கள் உள்ளன.

இலங்கையிலுள்ள குரங்குகளுக்கும் இந்தியாவிலுள்ள குரங்குகளுக்கும் மரபணு ரீதியிலான பிணைப்புக்களும் கலாசார பந்தங்களும் உள்ளன.

அத்தோடு இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் குரங்குகளை தெய்வமாக வணங்குகின்றனர். அதே போன்று இந்தியாவில் குரங்குகளுக்கான ஆலயங்களைக் கூட அவதானிக்கலாம்.

இவ்வாறு இந்தியாவிலும், இலங்கையிலும் தெய்வமாக வணங்கப்படும் குரங்குகளையே சீனாவுக்கு விற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

வன விலங்குகள் மற்றும் தாவரவியல் சட்டத்திற்கு முரணாக அரசாங்கம் குரங்குகளை விற்க முயற்சிக்கின்றது. இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.