ஒற்றுமை, நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்திக்காக பிரார்த்திப்போம் – ஊவா மாகாண ஆளுனர் முஸம்மிலின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

அல்லாஹ்வுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் தக்வா உள்ளவர்களாக நாம் ஆகுவதற்காகவும் எம்மீது கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்று, அதனைத் தொடர்ந்து ‘ஈதுல் பித்ர்’ புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற உலகெங்கும் பரந்து வாழும் சகோதர முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புனித அல்குர்ஆன் எமக்கு உபதேசித்துள்ளது போன்று முஸ்லிம்கள் எவ்வாறான சூழ் நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சமகாலத்தில் நாம் சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு வருகின்றோம்.

இதற்கான தீர்வினை துஆக்கள் மூலம் பெற்றுக்கொள்ள இந்த புனித நாளில் விஷேட துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.

குறிப்பாக ஒற்றுமை, நல்லிணக்கம், நிலையான சமாதானம், நாட்டின் அபிவிருத்தி போன்றவற்றுக்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டில் அரசியல் ரீதியான நெருக்கடி நிலைமைகள் தற்பொழுது தணிந்து காணப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாகப் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த புனிதமான நாளில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் அயலவர்களை இனம் கண்டு அவர்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்து, அவர்களது கஷ்டங்களைப் போக்கச் சகலரும் இத்தினத்தில் முன்வர வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலா நாம் நோற்ற நோன்பை அங்கீகரித்து அவனது உயரிய நற்கூலியைத் தந்தருள்வானாக, நம் நாட்டு மக்கள் முகங்கொடுக்கும் அனைத்து நெருக்கடிகளையும், சோதனைகளையும் நீக்கியருள்வானாக! ஆமீன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.