சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் குறித்த இறுதித் தீர்மானம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் – திஸ்ஸ அத்தநாயக்க

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆராயவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள 20 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் 19 ஆம் திகதி புதன்கிழமை இரவு மெய்நிகர் ஊடாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் வினவிய போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டது. பலராலும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இதன் காரணமாக இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனவே 24 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மீண்டும் கூடி ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.