மைத்திரி – ரணில் பொறுப்புக்கூற வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களான மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும்.

தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டதால் தான் அடிப்படைவாதிகள் தமது தாக்குதலுக்கு இலங்கையை தெரிவு செய்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் வழங்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.

குற்றவாளிகளுக்கு பாரபட்சமில்லாமல் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது.

நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான தன்மையில் காணப்பட்டது.தேசிய பாதுகாப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போதிய தெளிவு காணப்படவில்லை.

பல மாதங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூட்டப்படவில்லை.தேசிய பாதுகாப்புக்கு யார் பொறுப்பு கூறுவது என்ற நிலை காணப்பட்டது.

நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம் பள்ளியில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பலி வாங்குவதற்காகவே அடிப்படைவாதிகள் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை மேற்கொண்டார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

அடிப்படைவாதிகள் முதலில் ஆப்கானிஸ்தான், இந்தியாவில் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ள அவதானம் செலுத்தி பின்னர் அது தோல்வியடைந்த நிலையில் இலங்கையில் தேசிய பாதுகாப்பு அவதானத்துக்குரிய நிலையில் இருப்பதை கண்டு தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை மறுக்க முடியாது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.