ஜே.வி.பி.யினருக்கு அருகதை இல்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கதைப்பதற்கு ஜே.வி.பியினருக்கு எந்த அருகதையும் இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுயாதீன உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. மிகவும் கோரமான குற்றச் செயலே அந்த தாக்குதல். அது தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டும்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நீர்கொழும்பை சுற்றி வளைக்கவும் ஜே.வி.பி.யினர் திட்டமிட்டனர். இவர்கள் இப்ராஹிமின் வீட்டுக்கு முன்னால் சென்றே போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். அவரே அவர்களின் தேசியப் பட்டியலில் இருந்தார். அவரின் மகன்களே தாக்குதலில் தொடர்பு பட்டிருந்தனர்.

ஜே,வி,பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அன்று தாக்குதலின் போது கனடாவில் இருந்தார். நான் அமெரிக்காவில் இருந்தேன். ஆனால் நான் ஒருநாளில் வந்துவிட்டேன். ஆனால் அனுரகுமார 5 நாட்களின் பின்னரே வந்தார்.

இதனால் ஜே.வி.பியினருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கதைக்க அருகதையில்லை. வேண்டுமென்றால் தாக்குதல் தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு நான் ஜே.வி.பியினரை அழைக்கின்றேன்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இதனுடன் தொடர்புபட்டவர்கள் யார் என்பதனை அனுரகுமாரவிடம்தான் கேட்க வேண்டும்.

கோத்தாவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவா இப்ராஹிமின் மகனை அனுப்பினார் என்று கேட்கின்றோம். இதனை யாரின் தேவைக்காக செய்தீர்கள் என்று இப்ராஹிமிடம் அனுரகுமார கேட்கலாம் தானே.

எனவே கத்தோலிக்க மக்களின் துன்பத்தை வைத்து அரசியல் செய்ய நான் இடமளிக்கப் போவதில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு நான் ஒருபோதும் அரசியல் லாபம் தேடியது இல்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.