நாட்டில் சட்டம், ஒழுங்கை கோட்டா பாதுகாக்கவில்லை!  அட்மிரல் சரத் வீரசேகர சாடல்

நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதுவே பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் சட்டம்,ஒழுங்கை உறுதிப்படுத்தியுள்ளார்.

பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின்  சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற  சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்; –

பொருளாதாரப் பாதிப்புக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிட வேண்டும்.சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொருளாதாரப் பாதிப்புக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் தேசிய உற்பத்திகளைப் புறக்கணித்து சகல பொருள்களையும் இறக்குமதி செய்ததை மறந்து விட கூடாது.தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத சூழலில் நல்லாட்சி அரசாங்கம் அரசமுறை கடன்களை வரையறையில்லாமல் பெற்றுக்கொண்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.வெளிநாட்டு கடன்களை பெறுவது இல்லை என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தி அவர் செயற்பட்டார்.கொவிட் பெருந்தொற்று தாக்கம் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.

நாட்டின் பொருளாதார நிலையின் உண்மை தன்மையை கோட்டபய  ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்துரைத்திருந்தால் யுத்த காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியதை போல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியிருப்பார்கள்.

பொருளாதார விவகாரத்தில் மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்பட்டது.இதனை அரசியல் தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி இராச்சியத்துக்கு எதிரான போராட்டத்தை தோற்றுவித்தார்கள்.

மறுபுறம் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை,எவர் வேண்டுமானாலும் போராட்டத்தில் ஈடுபடலாம்,யார் யாரையும் தாக்கலாம், வீடுகளுக்கு தீ வைக்கலாம், என்ற நிலை காணப்பட்டது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்த ஆதரவாளர்கள் பேர வாவியில் தள்ளப்பட்டு தாக்கப்பட்டார்கள் .ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக கோட்டபய ராஜபக்ஷ உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். நாட்டில் சட்டம் ,ஒழுங்கை நிலைநாட்டாமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்பதை அவர் முதலில் விளங்கிக் கொண்டு குறுகிய காலத்துக்குள் சட்டம் ,ஒழுங்கை நிலைநாட்டி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும்.பல இலட்சம் சம்பளம் பெறும் தரப்பினரால் ஏன் வரி செலுத்த முடியாது.கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தினால் மாத்திரம் தான் நடுத்தர மக்களுக்கு நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.