ஈ.பி.எப். ஈ.ரி.எப். நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது – நிரோஷன் பெரேரா

சர்வதேச நாணய நிதியத்தினால் பெற்றுக்கொள்ளப்படும் கடன் உதவியைக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் என்ன ? அது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த விடயங்களையும் தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் நிராேஷன் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தில் 8 நாடுகளை தவிர ஏனைய நாடுகள் அதன் உறுப்பு நாடுகளாகும். இலங்கையும் நாணய நிதியத்தின் உறுப்பு நாடாகும். இலங்கை இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள சென்றிருக்கிறது.

ஆனால் 17ஆவது தடவையாக சென்றிருப்பதில் வித்தியாசம் இருக்கிறது. நாடு வாங்குராேத்து அடைந்த நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்துக்கு இம்முறை சென்றிருக்கிறோம். அப்படியானால் வெளிநாடுகளின் கடன் மறுசீரமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்போகிறோம் என்ற வேலைத்திட்டம் இருக்கவேண்டும்.

அத்துடன் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும்போது தேசிய கடன் மறுசீரமைப்பு செய்யப்போவதில்லை என அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது தேசிய கடன் மறுசீரமைப்பு செய்யப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தேசிய கடன் மறுசீரமைப்பு செய்யும்போது ஈ.பி.எப். ஈ.ரி.எப். நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று பங்குச் சந்தைக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் அரசாங்கம் மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் பங்குச்சந்தை இதற்கு இணக்கம் இல்லை என்றால் அதனை மூடிவிடுவோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இவ்வாறு இலகுவாக தெரிவிக்காமல் அதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் சந்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் வெளி்ப்படை தன்மை தொடர்பாக பாரிய பிரச்சினை இருந்து வருகிறது. ஒப்பந்தத்தை செயற்படுத்தும்போது வெளிப்படைத் தன்மையுடனும் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று இதனை செயற்படுத்த வேண்டும்.

அதன் மூலமே நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ள முடியும். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தைக்கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. அதனால்தான் அதுதொடர்பில் எந்த விடயத்தையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.