தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : உண்மையை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்கிறார் சிறிதரன்

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் இனவாதத்தைக் கருப்பொருளாகக் கொண்டு செயற்படுகிறது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பரிந்துரைகளை முன்வைக்க சர்வதேச நாணய நிதியம் ஏன் அவதானம் செலுத்தவில்லை.

தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்வரும் நாள்களில் பகிரங்கப்படுத்துவேன் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் சபைக்கு இரண்டு பிரதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் சாதக மற்றும் பாதக விடயங்கள் தொடர்பில் நாடபாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றிருந்தால் முரண்பாடற்ற ஒருமித்த தீர்மானத்தை எடுத்திருக்க முடியும்.

ஆனால் விவாதத்தின் போது தான் நாணய நிதியத்துடனான நிபந்தனைகளின் பொழிப்புகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை ஏமாற்று செயற்பாடாகும்.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச சமூகத்தின் அழுத்தம் போதுமானதாக இல்லை.நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான செயற்பாடுகள் நாளாந்தம் தீவிரமடைந்த பின்னணியில் சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு, பொருளாதார மீட்சியடைந்த பின்னர் தமிழ் இனத்துக்கு எதிரான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்கும் முனைப்புக்களே காணப்படுகின்றன.

தமிழ் சமூகத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட யுத்தத்தால் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

நாட்டின் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிராக மீண்டும் அழிப்பை தொடர்வதற்காகவா நாணய நிதியம் நிதி வழங்குகியுள்ளது என்பதை உயர்ந்த பட்ச சபை ஊடாகக் கேட்கிறோம்.

அரசியல் பிரச்சினை காரணமாகவே பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது, பொருளாதாரப் பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் பிரச்சினையை மூடி மறைக்க முடியாது.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இனவாதம் நாட்டின் பிரதான கருபொருளாக உள்ளது. இனவாத சிந்தனை ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உள்ளங்களில் காணப்படுகின்றன.

நாட்டில் இனவாத பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு ஊடாக தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படும்.

தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்துகிறது. இதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குகிறதா என்று நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடம் கேட்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.