பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான ஊடகவியலாளர் கோகிலதாசன் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் மேற்படி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட வழக்கிற்கு  சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் மற்றும் சட்டத்தரணி ரணித்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி பி.ஜெசிங்கம் ஆஜராகியிருந்தார்.

இவர் முகநூலில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வான மாவீரர் நிகழ்வு தொடர்பான பதிவைப் பதிவிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 28.11.2020 ஆம் திகதி அன்று வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து ஒரு வருடமும் 5 மாதங்கள் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.பின்னர் 07.03.2022 ஆம் திகதியன்று நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிரந்தார்.

இருந்தபோதிலும் இவரது வழக்கு இன்று வரை நடைபெற்றது. இவரது விடுதலை தொடர்பாக சர்வதேச உள்ளூர் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.