தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா சமரசமின்றி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மேதின வாழ்த்து

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.

”உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகள் மற்றும் வெற்றியை கொண்டாடும் முகமாக மே மாதம் 1 ஆம் திகதியை உலகத் தொழிலாளர்கள் நாளாக கொண்டாடுகிறோம்.

ஒரு நாட்டின் முதுகெலும்பு தொழிலாளர்கள் தான். பாட்டாளி வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளர்ச்சியடையும். இலங்கையில் பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் சுதந்திர இலங்கையிலும் கூட கடுமையான போராட்டங்கள் ஊடாகவே தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்ததுடன் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களும் பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டன.

இலங்கை – இந்திய காங்கிரஸ் உருவாக்கத்தின் பின்னர் அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக உருவானமை தொழிலாளர் நலன்சார் நீட்ச்சியின் அடிப்படையில்தான். குடியுரிமையற்று இருந்த பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்க இ.தொ.கா போராட்டங்களை வரலாறு முழுவதும் செய்துள்ளது.

அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளனர். அதே வழியில் இ.தொ.கா தொடர்ந்தும் பயணம் செய்யும். தொழிலாளர்களுக்காக எமது தொழிற்சங்க ரீதியான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

தொழிலாளர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் பொருளாதார திட்டங்களை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கபபடுவதை உறுதி செய்யும் அதேவேளை அவர்களின் வாழ்வாதார உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.