நாடு வீழ்ச்சியடைந்த போது ரணிலைத் தவிர வேறு எவரும் சவாலை ஏற்க முன்வரவில்லை!  அகிலவிராஜ் பெருமிதம்

ஜே.ஆர். ஜயவர்த்தன 70 வயதுக்கு பின்னர் இரண்டு முறை நாட்டில் ஜனாதிபதியாக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்ததுபோல் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது 70 வயதை தாண்டிய பின்னரே ஜனாதிபதியாகி இருக்கிறார்.

எனவே 2948 இல் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை முடித்துவிட்டே நின்றுவிடுவார் என ஐக்கிய தேசிய கட்சி உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் பிரதித் தலைவர் றுவன் விஜேவர்த்தன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

கடந்த வருடம் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் இக்கட்டான நேரத்தில் மே தினத்தை கொண்டாடியது.1956 தேர்தலில் தோல்வியடைந்த போது ஐக்கிய தேசிய கட்சியின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

1970 இல் ஐக்கிய தேசிய கட்சி புதைக்கப்பட்டதாக கூறப்பட்டது.  1988 இல் ஜே.வி.பி யினர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர்.

1993 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் எமது முன்னாள் தலைவர்களை வெடிகுண்டுகளால் அழிக்க முயன்றனர்.

2020 இல் கட்சியை இரண்டாகப் பிரித்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கட்சியாக மாறியுள்ளது.

ஆனால் இறுதியில், எங்கள் கட்சியின் தலைவர், நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார்.  இந்த நாடு வீழ்ச்சியடைந்த போது  ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் அந்த சவாலை ஏற்க முன்வரவில்லை.

இன்று அவர் இந்த நாட்டை படிப்படியாக முன்னோக்கி கொண்டு செல்கிறார். பல அவதூறு பிரசாரங்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

அவர் யாரையும் பழிவாங்கவில்லை.  இந்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, 2048 இல் வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு அவர் தோள் கொடுத்துள்ளார்.

ஜே.ஆர். ஜயவர்த்தன 70 வயதுக்கு பின்னர் இரண்டு முறை நாட்டில் ஜனாதிபதி பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்ததுபோல் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது 70வயதை தாண்டிய பின்னரே ஜனாதிபதியாகி இருக்கிறார்.

எனவே 2948இல் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை முடித்துவிட்டே நின்றுவிடுவார் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.