பாடசாலைகளுக்கிடையிலான கிறிகெட் போட்டிகளுக்கு பொலிஸ் அனுமதி பெற்று பொறுப்புடன் ஒழுங்குபடுத்துக! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு

களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலைக்கும் களுத்துறை மகா வித்தியாலயத்திற்கும் இடையிலான  மாபெரும் ஒரு நாள் கிரிக்கெட்தொடரின் (பிக் மேட்ச்) முடிவில் விளையாட்டு மைதானத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

போட்டியின் முடிவில் களுத்துறை மகா வித்தியாலயம்  கடைசி ஓவரில் வெற்றி பெற்றதையடுத்து, இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் மைதானத்துக்குள் பிரவேசித்ததால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கிடையிலான நட்பை வளர்க்கும் வகையில் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளை முறையாக ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அதனை ஏற்பாடு செய்யும் சகல தரப்பினரதுமாகும். ஒழுக்கத்தை பேணி அதனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பயாகல மைதானத்தில் இடம்பெற்ற ஒரு நாள் பாடசாலை கிரிக்கெட் போட்டியின் நிறைவின் பின்னர் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மோதலை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்  கூறுகையில் –

குறித்த மோதலின் போது பொலிஸார் தலையிட்டு சம்பவத்தை கட்டுப்படுத்தினர். அப்போது எந்த முறைப்பாடும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெறவில்லை. எவ்வாறாயினும் திங்கள் காலை  எதிரணி பாடசாலை மாணவர்களால் தனது மகன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என மாணவன் ஒருவரின் தாயார் பயாகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது பயாகல பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரி  தாக்கப்பட்டார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மையில்லை.

எனினும், களுத்துறை திஸ்ஸ கல்லூரியின் கிரிக்கெட் அணியின் உப தலைவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் களுத்துறை, நாகொட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று தலையில் விசேட சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளுக்கிடையிலான நட்பை வளர்க்கும் வகையில் நடத்தப்படும் பிக் மேட் போட்டிகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அதனை ஏற்பாடு செய்யும் சகலருக்கும் பொருந்தும்.  ஒழுக்கத்தை பேணி அதனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், பாடசாலை அமையப்பெற்றுள்ள பொலிஸ் பிரிவுக்குரிய பொலிஸாருடன்  கலந்துரையாடி அனுமதிப்பெற்று இவ்வாறு போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.