8 இலங்கையர்கள் உட்பட 26 மாலுமிகளுடன் தடுத்துவைக்கப்பட்டிருந்த கப்பல் விடுவிப்பு! நைஜீரிய நீதிமன்று உத்தரவு

ஓகஸ்ட் 2022 முதல் நைஜீரியா மற்றும் ஈக்குவடோரியல் கினியாவில் சர்ச்சைக்குரிய எண்ணெய் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் ஏப்ரல் 28 அன்று போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள நைஜீரியாவின் பெடரல் உயர்நீதிமன்றத்தால் எட்டு இலங்கையர்களை உள்ளடக்கிய மாலுமிகளுடன் விடுவிக்கப்பட்டது.

நைஜீரிய அதிகாரிகளுக்கும், கப்பல் உரிமையாளரான இடன் மரிடைம் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கப்பலின் நீதிமன்ற காவலை நிறுத்துவது மற்றும் குற்றச்சாட்டுகளை கைவிடுவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவு செய்தது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பலில் எட்டு இலங்கை பணியாளர்கள் உட்பட 26 மாலுமிகள் இருந்தனர்.

அபராதம் மற்றும் பிற நிபந்தனைகளை கப்பல் நிறுவனம் பூர்த்தி செய்தவுடன், இலங்கை பணியாளர்களை விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வெளியுறவு அமைச்சகம் கப்பல் உரிமையாளருடன் செய்து வருகிறது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளின்படி, கென்யாவின் நைரோபியில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் உதவிகளை வழங்கியதுடன், சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை இலங்கை பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தது.

கென்யாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், நவம்பர் 13, 2022 அன்று நைஜீரியாவின் லாகோஸில் கப்பலில் இருந்த இலங்கை பணியாளர்களை சந்தித்து அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்தார்.

நீதிமன்றக் காவலில் வைக்கப்படாமல் அவர்களது கப்பலிலேயே பணியாளர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். உயர்ஸ்தானிகர் கனநாதன் இலங்கையர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய உரிமைகளை முழுமையாக வழங்குவதை உறுதி செய்தார்.

குழு உறுப்பினர்களில் 16 இந்திய பிரஜைகளும் இருந்ததால், கென்யாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அபுஜாவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இது தொடர்பில் செயற்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.