சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த 3000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்! ஜனாதிபதி நிதியத்தின் நிதியுதவியில்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கல்வி பொதுத் தராதர சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று உயர்தரத்துக்குத் தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான திட்டத்தை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன.

அதற்கமைய ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் 2023 நிகழ்வு நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்குத் தகுதி பெற்ற 3000 மாணவ, மாணவியருக்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, இதற்காக நாடு முழுவதிலும் உள்ள 100 வலயக் காரியாலயங்களை உள்ளடக்கியதாக வலயமொன்றுக்கு 30 என்ற அடிப்படையில் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

புலமைப்பரிசில் வழங்கலின் அடையாள ரீதியாக மேல் மாகாணத்தின் 11 கல்வி வலயங்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 110 மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் கீழ் புலமைப்பரிசில்களை பெற்றுக்கொண்ட ஒருவருக்கு க.பொ.த உயர்தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை நிறைவு செய்யும் இரு வருட காலப்பகுதிக்கு மாதாந்தம் 5000 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதோடு அதற்காக 360 மில்லியன் ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்துக்கு இணையாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பாடசாலை பைகள், அப்பியாச கொப்பிகள், குடை, கடிகாரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பரிசில்களும் புலமைப் பரிசில் பெற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் டபிள்யூ.ஏ.சரத் குமார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.