கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கிரான் பிரதேசசெயலாளர் பிரிவின் முறுத்தானையில் வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் எனப்பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டியைச் சேர்ந்த க.கிருஷ்ணப்பிள்ளை (வயது -74) என்ற முதியவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை நாற்பதாவது வில் முறுத்தானையில் உள்ள தமது வயலில் உள்ள வாடியில் அயலவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் வந்த நபர் ஒருவர் முதியவரை தலையில் வெட்டி காயப்படுத்தி விட்டு, தப்பி ஓடியுள்ளார் என  முதியவரின் மகன் தகவல் தெரிவித்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரைப் பொதுமக்கள் பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவித்தனர். சந்தேக நபர் நாளாந்தம் முதியவரின் வயல் காணிக்குள் அத்துமீறி சென்று அங்குள்ள பலன் தரும் மரங்களில் உள்ள காய் கனிகளைக் களவாடுவதும் அவற்றைச் சேதம் விளைவிற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டு முதியவர் அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கூறியதால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலை சம்பவத்தில் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை ஆதார  வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்ற பதில் நீதிபதி எம்.எச்.எம்.றம்சீன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளை பணித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.