தலைமன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவு படுத்துமாறு கோரி மன்னார் அரச அதிபரிடம் ஆவணக் காணொளி கையளிப்பு

மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.  ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில்  தலை மன்னார் ராமேஸ்வரம்  இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம்  எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை  இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்ட காணொளி அடங்கிய இறுவெட்டு திங்கட்கிழமை (8) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெலிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ்  நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு  மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோருக்கும் வழங்கும் வகையில் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய நூல்களின் பிரகாரம் ஆதிகாலத்தில்  பொருளாதாரத்திலும் வாழ்வியலிலும் மிகச் சிறப்பாக விளங்கிய மன்னார் மாவட்டம் தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியுற்று பின்தங்கிய மாவட்டமாக காணப்படுவதற்கு காரணங்கள் என்ன என்பதை  ஆய்வு செய்து  அவற்றை காணொளியாக தொகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பண்டைய காலத்தில் துறைமுக செயல்பாடு, வியாபார நடவடிக்கைகள் மூலம் சிறப்பான பொருளாதாரத்தில் இருந்த மன்னார் மாவட்டம் துறைமுக செயல்பாடுகள் நிறுத்தப் பட்டதன் பின்  இவ்வாறு பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது என்ற உண்மை கண்டறியப்பட்டு ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அதே இலக்கிய நூல்களின் ஆதாரத்துடன் மன்னார் கட்டுக்கரை பகுதி பழங்காலத்தில் பாரிய வரலாற்று வியாபார பண்பாட்டுப் பெருநகரம் பெருநகரமாக இருந்துள்ளது என்பதும் கூறப்பட்டுள்ளது .

மேலும் இந்த காணொளிக்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் மாவட்டம் பண்டைய காலத்தில் இருந்ததைப் போன்று  பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வியாபார நகரமாக மாறுவதற்காக மீண்டும் தலைமன்னார், ராமேஸ்வரம் இடையில் முன்பு இருந்ததைப் போன்று கப்பல் சேவை ஒன்றை விரைவாக ஆரம்பித்து எதிர்காலத்தில் வலுவான துறைமுகம் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டால் மன்னார் மாவட்டம் பொருளாதாரத்திலும் வாழ்வியலிலும் உணர்ச்சியடையும் என்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நேவிஸ் மொராய்ஸ், முன்னாள் மன்னார் ரோட்டரி கழகத் தலைவர்   ஜெரோம்  பத்திநாதன், மன்னார் பொறியியலாளர் றொபேட் பீரிஸ், பல்துறை வித்தகர் நாகேஷ் உருத்திரமூர்த்தி, முன்பு கப்பல் சேவை நடை பெற்ற போது அங்கு தொழிலாளியாக  செயற்பட்ட பகுர்தீன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யசோதரன், பெண்கள் நல செயற்பாட்டாளர் ம ஷாஹிரா மன்சூர்,  மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களும்  தங்களது கோரிக்கைகளை கானொளிகளாக  பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் மன்னார் மாவட்டத்தை பொறுத்த மட்டில் சிறந்த தொழில் முயற்சியாளர்களும் உற்பத்தியாளர்களும்   காணப்படுகிறார்கள். அவர்களுக்கான சந்தை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தொழில் முயற்சிகளை கைவிட்டு  வேறு வேலைகளில் கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தங்களிடன் உற்பத்தி செய்யப்படும் பலவிதமான பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்கள்  போக்குவரத்து செலவை காரணம் காட்டி குறைந்த விலைகளுக்கு தம்மிடம் இருந்து பொருட்களைப் பெற்று அதிக லாபம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே எமது உற்பத்திப் பொருட்களை நாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பனை செய்வதற்கு  தலைமன்னார் ராமேஸ்வரத்திற்கு இடையிலான கப்பல் சேவை மிகவும் அவசியம் என்றும்  உற்பத்தியாளர்களும்  தொழில் முயற்சியாளர்களும் கருத்து தெரிவித்தார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.