தமிழர் பிரச்சினையை ரணிலால் தீர்க்க முடியவில்லையெனில் வேறு எந்த தலைவர்களாலும் என்றைக்கும் தீர்க்கமுடியாது!  சாமர சம்பத் இப்படிக் கருத்து

தமிழ் மக்களின் பிரச்சினையை ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் இந்த நாடளுமன்றத்தில் வேறு எந்த தலைவருடனும் தீர்த்துக்கொள்ள முடியாது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி வழங்கி இருக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கைக் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

வடக்கு கிழக்கு மக்களுக்குக் குறைந்த பட்ச நியாயத்தையாவது வழங்கியது ரணில் விக்ரமசிங்க ஆவார். அவர் வடக்கு மக்களுக்கு நியாயத்தை வழங்கியதாலே தேர்தல்களின் போது தெற்கு சிங்கள மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள். வடக்கு மக்களுக்கு சலுகைகளை வழங்கிதாலே ரணில் விக்ரமசிங்க 2005 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.

அதனால் தமிழ் மக்களின் பிரச்சினையை ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் இந்த நாடாளுமன்றத்தில் வேறு எந்த தலைவருடனும் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாது.

தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதேபோன்று சிங்கள மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. வடக்கு மக்களின் பிச்சினையை ஜனாதிபதியுடன் கலந்துரையாடித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

ஜனாதிபதி அவர்களுக்கு இரண்டு தினங்கள் வழங்கி இருக்கிறார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை ஜனாதிபதியிடம் தெரிவித்து தீர்த்துக்கொள்ளவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து இனவாதம் பேசுவதால் எமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. சிங்களவர்களும் வடக்கில் உள்ளவர்களும் இனவாதத்தை அணைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இனவாதத்தால்  எதனையும் சாதிக்க முடியாது என்பதை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது. அதேபோன்று தெற்கில் இருப்பவர்களும் உணர்ந்திருக்கின்றனர்.

எனவே  வடக்கு மக்களுக்கு குறைந்த பட்சமேனும் நன்மை செய்திருப்பவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். அவரின்  தலைமைத்துவத்தில் தமிழ் மக்களின் பிச்சினையை முடியுமானளவு தீர்த்துக்கொள்ள தமிழ் கட்சிகள் முயற்சித்துக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தமிழ்த் தேசியக கூட்டமைப்புக்கு வழங்கி இருக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்கவால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் இந்த நாடாளுமன்றத்தில் வேறு எந்த தலைவரினாலும் தமிழ் மக்களின் பிச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.