ஏ.எவ்.பி. இலங்கை புகைப்பட ஊடகவியலாளருக்கு மனித உரிமைகள் ஊடகவியலில் சர்வதேச விருது!

2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஊடகவியல் விருதினை ஏ.எவ்.பி. இன் இலங்கையின் கொழும்பு புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் வென்றுள்ளார்.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் வணிக ஊடகவியலுக்கான ரெனோல்ட்ஸ் மையம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட விருதுகளில் ‘புகைப்படத் தொடர்’ பிரிவில் கௌரவ விருதினை இஷார கொடிகார (வயது 41) வென்றுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு வழிவகுத்த அரசியல் எழுச்சிகளின்போது ஆற்றிய பணிகளுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

‘கடந்த வருடம் கொழும்பில் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களின்போது நீங்கள் ஆற்றிய கடினமான மற்றும் சிறந்த பணிக்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்படுகிறது!’ என ஏ.எவ்.பி.இன் ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கான புகைப்பட பணிப்பாளர் மிலாடன் அன்டெனோவ் குறிப்பிட்டார்.

இஷார 2008ஆம் ஆண்டு ஏ.எவ்.பி. இல் இணைந்துகொண்டதோடு, அதன் கொழும்பு பணியகத்தில் கடமையாற்றி வருகிறார்.

மாலைத்தீவின் அரசியல் குழப்பநிலை, 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் களத்தில் நின்று புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

உடனடி செய்திப் பிரிவில் ஏ.எவ்.பி.இன் காபூல் பணியகம் முதலாவது பரிசினை வென்றது.

‘மனித உரிமைகள் தொடர்பான ஒரு செய்தி நிகழ்வில், காலக்கெடு அழுத்தத்தின் கீழ் வேகம், துல்லியம் மற்றும் உயர்தரமான எழுத்தாக்கம்’ என்ற அவர்களின் பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தற்போது 151 நாடுகளில் ஏ.எவ்.பி. தனது சந்தாதாரர்களுக்கு பரந்தளவிலான விடயப்பரப்புகளில் விரிவான செய்திகளை வழங்குகின்றது.

அத்தோடு, அரிதாக, ஏனைய ஊடகங்களால் எப்போதாவது பதிவுசெய்யப்படும் இடங்களில் இருந்து இது பெரும்பாலும் செய்திகளை வழங்குகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.