உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலை இலங்கையில் அமைக்கப்படும்! ஜனாதிபதி ரணில் உத்தரவாதம்

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் இன்று உலகிகுக்கு சவாலாக உள்ள போதிலும், அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளைச் செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற 10 ஆவது சுற்றாடல் ஜனாதிபதி பதக்க விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி –

காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக அதனைத் தாமதப்படுத்துவதே இதுவரை இடம்பெற்று வருகிறது. இன்று உலகில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நான் குறிப்பிட வேண்டியதில்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எங்களுக்கு சிக்கல்கள் இருந்தன. ஆனால் இன்றைய பிரச்சினை காலநிலை மாற்றத்தை எப்படித் தடுப்பது என்பதல்ல, அதை எப்படி மட்டுப்படுத்துவது என்பதுதான். மேலும் இந்தப் பணியை வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டும்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. 1815 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் இலங்கைக்கு வந்து மலைநாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது இந்நாட்டின் சனத்தொகை 02 மில்லியனாக இருந்ததாகப் பலர் கூறுகின்றனர். ஒன்றரை இலட்சம் கூட இல்லை என்று சிலர்  கூறுகின்றனர். 1931 இல் சர்வஜன வாக்குரிமையைப் பெற்றபோது, அந்த எண்ணிக்கை 5 மில்லியனாக இருந்தது. நாம் சுதந்திரம் அடையும் போது அது 7 மில்லியனாக இருந்தது. இன்று அதனை விட மூன்று மடங்காக உயர்ந்திருக்கின்ற போதிலும், எமது காணிகள் அதிகரிக்கவில்லை. ஆனால் காடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

2050இல் உலக மக்கள் தொகை இன்னும் அதிகரிக்கும். அப்போது நாம் எப்படி இந்த காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வது? எனவே, ஒரு நாடென்ற ரீதியில் நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான புதிய சட்டங்களைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

இந்த சுற்றுச்சூழல் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட காலத்தில், அவை நவீன சட்டங்களாக இருந்தன, ஆனால் இன்று அவை நவீன சட்டங்கள் அல்ல. எனவே, புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள் அவசியம்.மேலும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் புதிய சட்டங்கள் அவசியமாகிறது.

காலநிலை மாற்றம் தொடர்பான கேந்திர நிலையமொன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதன்படி, சிங்கராஜ வனம், ஹோர்டன் சமவெளி, சிவனொலிபாதமலை மற்றும் நக்கிள்ஸ் ஆகிய இடங்களைப் பாதுகாக்க புதிய விதிகள் கொண்டு வரப்படும்.

முத்துராஜவெல போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்க புதிய சட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். மேலும், புதிதாக காடுகளை உருவாக்க வேண்டும். இதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்க இப்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதனோடு நின்றுவிடாது காலநிலை மாற்றம் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதனை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடவிதானத்தில் சேர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, உலகின் முதல் சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். முதுகலைப் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பையும், ஆராய்ச்சிப் பணிக்கான வாய்ப்பையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.

இன்று உலகில் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நிலையமொன்று கிடையாது. அந்த நிலையத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பல நாடுகளின் பங்களிப்புடன் அந்தப் பணி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் 2,000 – 3,000 பேர் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தேவையான பயிற்சிகளைப் பெற்று, உலகத்துடன் சிறந்த உறவை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இலங்கை என்ற வகையில் நாம் என்ன உதவிகளைச் செய்ய முடியும் என்பதை நாம் கண்டறிய வேண்டும். அதற்கு எம்மால் வழங்கக்கூடிய உறுதுணையாக இந்தப் பல்கலைக்கழகம் இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே, தற்போது பல நாடுகளுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு டுபாயில் நடைபெறும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இது தொடர்பான விடயங்களை முன்வைப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.