முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்களை ஒன்றுதிரளுமாறு அழைப்பு! விடுத்தார் கோவிந்தன் கருணாகரன் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ‘முள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல்’ மட்டக்களப்பு – கல்லடி கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில் மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு – வாவிகரை வீதியிலுள்ள நாடளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு கோரிக்கையை விடுத்துள்ளார்.

‘மே 18 ஒட்டிய ஒரு வாரம் முள்ளிவாய்க்கால் தினமான வாரம் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் துக்கமான கரி வாரமாக தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு நினைவு கூர்ந்துவரும் இந்த வேளையிலே இலங்கை அரசு தன்னுடைய போர் வெற்றியைக் கொண்டாடி வருகின்றது.

2009 மே 18 காலப்பகுதியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பொதுமக்கள் இந்த வாரத்தில் கொல்லப்பட்டனர் என முன்னாள் மன்னார் ஆயர் யோசப் இராயப்பு தகவல் வெளியிட்டார்.  கிட்டத்தட்ட இந்த போர் தொடங்கிய காலமிருந்து 3 லட்சம் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் பல தலைவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தை நாங்கள் வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம். அதனடிப்படையில் இந்த ஆண்டும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சிங்கள பேரினவாத இனவாதியான சரத்வீரசேகர இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த நினைவு தினத்தையிட்டு இடம்பெறும் ஊர்தி பவனி மற்றும் விளக்கேற்றல்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்கள் போன்றவை எவை எதற்காக என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

உண்மையிலே எங்கள் மக்கள் எங்களுக்காக உயிர் நீத்தவர்களுக்கு நினைவு கூறவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது அந்தவகையில் நாங்களும் ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த இரண்டு வருடங்கள் கொவிட்டினால் அலுவலகங்கள் வீடுகளில் நினைவு கூர்ந்தோம். இருந்தபோதும் இந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நினைவு கூற ஏற்பாடு செய்துள்ளோம்.

எனவே இந்த நினைவேந்தலில் இனமத சமய வேறுபாடுகளின்றி ஓர் உணர்வு பூர்வமாகத் தமிழ் பேசும் மனிதனாக – தமிழினத்திற்காக – தமிழினத்தின் உரிமைக்காக போராடிய இனமாக – இதை நினைவு கூறுவதற்க அனைவரும் ஒத்துழைத்து கல்லடி கடற்கரைக்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு’  கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.