ஊவா மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று வியாழக்கிழமை (18) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு முறைமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஊவா மாகாணத்தை டெங்கு அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

நுளம்புகள் பெருகும் இடங்களைச் சோதனை செய்து சுத்தம் செய்வது தொடர்பில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் பிரதானிகளும் தெளிவூட்டல், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடை வளாகங்களைச் சோதனை செய்தல், ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புக்களை வழங்குதல், டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் வசிக்கும் பிரதேசத்தில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை அழித்தல், இடங்களைக் கண்டறிந்து கொசுப்புழுக்களை அடையாளம் காணல், வீடுகள் மற்றும் நிறுவன வளாகங்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேவேளை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வெற்றியடையச் சுகாதார திணைக்களத்தின் தலையீடு மட்டும் போதாது எனவே, மக்களின் ஆதரவும் தேவை எனச் சுகாதார அதிகாரிகள் மேலும் வலியுறுத்துகின்றன.

இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டச் செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், 112 படைப்பிரிவுகளின் பிரதானி, தியத்தலாவ விமானப்படையின் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.