ஜனாதிபதியுடனான பேச்சுகள் திருப்திகரமானவையாக இல்லை!  தவராசா கலையரசன் அதிருப்தி

ஜனாதிபதியுடனான பேச்சுகள் திருப்திகரமானவையாக அமையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு அம்பாறை இலங்கைத்  தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்வின் 14 ஆவது நிறைவை அனுஷ்டிக்கும் முகமாக நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர் –

அரசாங்கம் கையாள்கின்ற ஒவ்வொரு விடயங்களையும் பொதுமக்களாகிய நீங்கள் அவதானிக்க வேண்டும். 1983 ஆம் ஆண்டு எமது இனம் நாடு பூராகவும் அழிக்கப்பட்ட பின்னர் 2009 ஆம் ஆண்டு மீண்டும் மிக மோசமாக அழிக்கப்பட்டது.

இவ்வாறான விடயங்களை எமது இளைய சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எதிர்காலத்தில் எமது இனம்  எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துகின்றோம். இந்த நாட்டின் தலைவர்கள் எந்தவித இதய சுத்தியுமின்றி எம்மை எவ்வாறு அழிக்க வேண்டும் என்பதை எண்ணிக்கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்க விரும்புகின்றேன். – என்றார்.

குறித்த நிகழ்வின் போது நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கூட்டு வழிபாடு இடம்பெற்றது. பின்னர் பூசையைத் தொடர்ந்து நினைவுச்சுடர் மாவீரர் குடும்பம் சார்பாக இரு தாய்மார் ஏற்றினர். அத்துடன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியுடன் ஏனையோர் சுடர் ஏற்றினர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.