முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த கனடாப் பிரதமரின் கருத்து! தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிட்டது இலங்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபiணையை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கனடாதூதுவர்  எரிக்வோல்சினை வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று தூதுவரை அழைத்து எங்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

நாங்கள் 14 வருடங்களுக்குப் பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் எனத் தெரிவித்துள்ள கனடா பிரதமர், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில்   ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன. பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாகக் கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் எனத் தெரிவித்துள்ள கனடா பிரதமர் மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும்  இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களுக்காகக்  குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அறிக்கையை கண்டித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்  இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவியாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.