அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்! சிறப்புரிமை வழங்க கூடாது என்கின்றன எதிர்க்கட்சிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன வலியுறுத்தின.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 3 கிலோ கிராம் தங்கத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்தபோதே இரு கட்சிகளும் இவ்வாறு வலியுறுத்தின.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இது தொடர்பில்  உரையாற்றுகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கிலோ கிராம் தங்கத்துடன்  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்  கைது செய்யப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்காக எந்த சிறப்புரிமைகளும் வழங்கப்படாது விசாரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவரின் இவ்வாறான செயற்பாடுகளால் தான் மக்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடுமையாக சாடுகிறார்கள். எனவே  உரிய விசாரணைகள் சுயாதீன முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். – என்றார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன ராஜகருணா   குறிப்பிட்ட  கருத்துடன் நாங்களும் உடன்படுகின்றோம்.  அலி சப்ரி ரஹீம்  தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.  இவ்வாறான செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவே அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.