சண்முகாவில் ஆசிரியை ஹபாயா அணிய இணக்கம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க சமிஞ்ஞை!  இம்ரான் எம்.பி. மகிழ்ச்சி தெரிவிப்பு

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்பட மாட்டாது  என கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக் கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பு நீதிமன்றில் முன்மொழிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த விடயம் தமிழ் பேசும் மக்களிடையே நல்லதோர் நல்லிணக்கத்துக்கான சமிஞ்ஞையாகத் தென்படுவதாகவும் இரு தரப்பாரும் விட்டுக்கொடுப்போடும், இணங்கியும் செல்வதன் மூலம் பலம் பெற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாசார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் பாடசாலை அதிபர்  லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கருத்து தெரிவிக்கையில் –

கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் வாழ்கின்றனர்.

இங்கு பல சமய கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. எனவே வௌ;வேறு இன அடையாளத்தை கொண்டவர்களாக இருந்தாலும் சரி, வௌ;வேறு சமயத்தை பின்பற்றினாலும் சரி, நமக்கிடையே புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் காணப்பட வேண்டும்.

திருமலை. சண்முகா ஹபாயா விவகாரமானது ஆரம்பத்திலேயே பேசி தீர்மானமொன்றிக்கு வந்திருக்கலாம். துரதிஷ்டமான சில நடவடிக்கைகள் பல கசப்பான அனுபவங்களை தந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இவற்றை பேசிக்கொண்டிருப்பதை விடுத்து நாம் இணக்கமாக அடுத்த கட்டத்துக்கு செல்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

அத்தோடு ஆசிரியை பஹ்மிதா தமது உரிமைக்காக நீண்ட நாட்கள் போராடினார். அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. அத்தோடு அவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களையும் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.