அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கு முயற்சி! அளவீட்டு முயற்சி மக்களால் தடுத்து நிறுத்தம்

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று (வியாழக்கிழமை) தடுத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியை அளவீடு செய்ய வருகைதந்திருந்தனர்.

இந்த நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அந்தப் பகுதிமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குறித்த காணிசுவீகரிப்பு நடவடிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு மேற்படி காணியை அளவீடு செய்து, இராணுவத்துக்காக சுவீகரிக்கும் நடவடிக்கையை அனுமதிக்கமுடியாதென அந்தப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.

மேலும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துயன், மாவீரர்களின் பெற்றோர்கள், கிராமமக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை தற்போது 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், அங்கு இரணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள், இராணுவத்தினருக்கான விளையாட்டு செயற்பாடுகள் இடம்பெறும் இடமாகவும் அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணி காணப்படுகின்றது. அதுதவிர குறித்த காணியில் இராணுவத்தினரால் உணவகம் ஒன்றும் நடத்தப்பட்டுவருகின்றது.

இந் நிலையில் துயிலுமில்லக்காணியின் வெளிப்புறத்திலேயே வருடாவருடம் மாவீரர் நாளில் மாவீரர் நாள் அஞ்சலிகள் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இவ்வாறான சூழலில் அண்மையில் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.