தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவுடன் சிறீதரன் எம்.பி. ஆய்வு!

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை தொடர்பிலான கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதானிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் புதன்கிழமை நண்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்த விவரண அறிக்கையொன்றை கடந்த மே 9ஆம் திகதி சிறீதரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அதனையடுத்து, அவர் அந்த அறிக்கையின் பிரதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகளுக்கு தனித்தனியே அனுப்பினார்.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஆணைக்குழுவின் பிரதானிகளால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது தனியாருக்கோ, மத நிறுவனங்களுக்கோ சொந்தமான காணிகளில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் உரிய தரப்பினர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது, பொலிஸ் முறைப்பாடு செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளையும் கையாளும் பட்சத்தில், இந்த விடயங்கள் தொடர்பில் தமது நிறுவனம் சார்ந்து மேல்மட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரும் நீதிபதியுமான ரோகினி மாரசிங்க சுட்டிக்காட்டினார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.