இலங்கையிலிருந்து முதல் ஹஜ் குழு புறப்பட்டுள்ளது!

நூருல் ஹூதா உமர்

இலங்கையின் ஹஜ் முகவர் நிலையமான சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் 63 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனித மக்கா மாநகர் நோக்கி புறப்பட்டது.

இந்த வருடம் இலங்கையில் இருந்து புறப்படும் முதலாவது குழுவை இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி விமான நிலையத்தில் வரவேற்று மக்கா நோக்கி வழியனுப்பினார். உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தரும்  ரஹ்மானின் விருந்தினர்களை சவூதி அரசாங்கம் பெரிதும் வரவேற்பதாகவும், இரு புனிதஸ்தலங்களினதும்  பாதுகாவலரின் அரசாங்கம் அல்லாஹ்வின் வீட்டிற்கு வருகைதரும் யாத்ரிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும், அவர்களின் வசதியை உத்தரவாதப்படுத்துவதற்கும், தமது ஹஜ் கிரியைகளை மிகவும் எளிதாக நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் சவூதி அரேபியாவின் தூதுவர் தனது சிறு உரையில் தெரிவித்தார்.

மௌலவி ஏ.எஸ்.எம். சம்சுத்தீனால் கிழக்கு மாகாணத்தில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் தனது 59 ஆம் வருட ஹஜ் பயணத்தை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் மரணத்துக்குப் பின்னர் இந்த முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் ஆனது அன்னாரின் புதல்வர்களான மௌலவி எம்.எஸ்.எம்.சுஹூருத்தீன் மற்றும் எம்.எஸ்.எப்.ஆர்.முகத்தஸி ஆகியோர்களால் இயங்கிவருகிறது.

இந்நிகழ்வில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட். ஏ. எம். பைசல், இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவர்  இப்ராஹிம் சாஹிப் அன்சார், சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் ஹஜ் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.