அமெ. – இலங்கை ஒத்துழைப்புடன் நிறைவடைந்த இந்தோ – பசுபிக் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மன்றம்!

அமெரிக்காவின் இந்தோ – பசிபிக் கட்டளையின் அனுசரணையுடன் இலங்கை கடற்படையால் ஓகஸ்ட் 14ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட 12 ஆவது வருடாந்த இந்தோ – பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் ஆசிய-பசுபிக் பிராந்தியம் முழுவதுமுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றும் தரப்பினரை ஒன்றிணைத்தது.

28 நாடுகளின் பங்கேற்புடன் இலங்கையால் நடத்தப்பட்ட இந்த முதலாவது ஐபிஈஎஸ்எவ் மன்றம் ‘ஒத்துழைப்பின் ஊடாக சுற்றுச்சூழல் மீள்தன்மை’ எனும் தொனிப்பொருளின் கீழ் கூட்டு ஒத்துழைப்பின் மூலமாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தியது.

இந்த நிகழ்வு காலநிலை பாதுகாப்பு, வளங்களின் நிலைபேறான தன்மை, பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாற்றம் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை, பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் தன்மையுடைய சமூகங்களைப் பேணி வளர்த்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் ஒரு பாதுகாப்பான இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களில் அமெரிக்காவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆரம்ப உரையாற்றுகையில் –

பெரிய, சிறிய அனைத்து நாடுகளும் வெற்றி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே உலகம் தொடர்பான எமது தொலைநோக்காகும்.

நீங்கள் ஃபிஜியில் அல்லது ஆஸ்திரேலியாவில் அல்லது மங்கோலியாவில் அல்லது இலங்கையில் என எங்கு இருந்தாலும், நாம் அனைவரும் பாதிக்கப்படக்கூடியவர்களே.

இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள நாடுகளைத் தாக்கும் தீவிரமான காலநிலை உச்சநிலைகளை நாம் காண்கிறோம். நாம் அனைவரும் அதன் பாதிப்புகளை உணர்கிறோம்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை உணவுப் பாதுகாப்பைப் பாதித்துள்ளது.

இவ்வாறான பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான சிந்தனைகளை பகிர்ந்துகொள்வதற்காகவும் புதுமையான வழிகளை கண்டறிவதற்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைவது இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவிக்கையில் –

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக நாம் எவ்வாறான முன்னேற்றங்களை அடைந்தாலும், சாதித்தாலும், இயற்கை எப்பொழுதும் அதன் தனித்துவமான ஆச்சரியங்களுடன் அவையனைத்தையும் விஞ்சி நிற்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஆகையால், மனிதன் இன்னும் அதிக விழிப்புடன் இருத்தல் அவசியமாகும். எனவே, அறிவாற்றல் உடையவர்கள் என்ற வகையில் நாம் நமது நாகரிகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒரே மாதிரியாகப் பேணிப் பாதுகாப்பதை உறுதிசெய்யக்கூடிய ஓர் உறவை உருவாக்கக்கூடிய வகையில் பகுத்தறிவுடன் நடந்துகொள்வதைத் தொடர வேண்டும் எனக் கூறினார்.

நான்கு நாள்களாக நடைபெற்ற இந்த நிகழ்வு முழுவதும் காலநிலை மாற்றம், நிலப் பாதுகாப்பு, கடல் மற்றும் நீர் பாதுகாப்பு, நகரமயமாக்கலின் பாதுகாப்பு மற்றும் விளைவுகள் போன்ற விடயப்பரப்புகளில் அறிவைப் பகிர்வதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பரப்புவதற்குமான சூழலை மேம்படுத்தக்கூடியவாறு முன்வைப்புகள், குழுநிலை கருத்தாடல்கள் மற்றும் கலந்துரையாடும் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு முழுமையான அணுகுமுறையை தழுவியதன் மூலம் தீவிரமான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு செயற்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்குவதற்கு ஐPஈஎஸ்எவ் வசதிசெய்தது.

பிராந்தியம் முழுவதும் சுற்றுச்சூழல் மீள்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்குவதில் செயற்திட்ட அபிவிருத்தி மற்றும் பணிக்குழு அபிவிருத்தி செயலமர்வுகள் முக்கிய பங்காற்றின.

இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் 2010ஆம் ஆண்டு ; ஆரம்பிக்கப்பட்டது.

பிராந்திய ஒத்துழைப்பு, அறிவைப் பகிர்தல், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்காக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களைப் பேணி வளர்ப்பதில் கவனம் செலுத்தும் ஒரு வருடாந்த நிகழ்வாகும்.

இந்தோ – பசுபிக் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளால் இம்மன்றம் நடத்தப்படுகிறது.

சுற்றுச்சூழல் மீள்தன்மை மற்றும் பாதுகாப்புக்காக செயற்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்குவதற்கு நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினரை இம்மன்றம் ஒன்றிணைக்கிறது.

2024 ஆம் ஆண்டுக்கான இந்தோ – பசுபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் வனுவாட்டுவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.