வெப்பம் காரணமாகப் பொதுமக்கள் அதிக நீராகாரம் அருந்த வேண்டும்! வைத்தியர் யமுனானந்தா அற்வைஸ்
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வானிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
குறிப்பாக மதிய வேளையில் அதிக வெப்பம் காணப்படுகின்றது. குறிப்பாக 11 மணியிலிருந்து 2 மணி வரையான காலப்பகுதியில் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றது.
இந்த வெப்ப அதிகரிப்பால் ஏற்படக்கூடிய நோய்கள் என்று கூறும்போது, நீரிழப்பு ஏற்படும். அதனை தடுப்பதற்கு போதியளவு நீர் ஆகாரம் அருந்த வேண்டும்.
சாதாரணமாக வயது வந்தவர்கள் 2 தொடக்கம் 3 லீற்றர் நீரை சாதாரணமாக அருந்த வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை விட அதிகளவு நீரை அருந்த வேண்டும்.
குறிப்பாக சிறுவர்கள் 2 தொடக்கம் 3 லீற்றர் நீர் அருந்துவது அவசியமாகும்.
அடுத்ததாக மதிய வேளைகளில் பிரயாணங்களைத் தவிர்ப்பதால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்.
குறிப்பாக மதிய நேரங்களில் விளையாட்டுகளில் ஈடுபடுவதை சிறுவர்கள் தவிர்ப்பது நல்லது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு அடுத்த இரண்டு கிழமைகளுக்கு நீடிக்கலாம். அதேவேளை, போதியளவு நீர் உள்ள பழ வகைகளை உட்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
பழங்கள் போதியளவு சாப்பிடும் பொழுது வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும். அதேபோல உடல் வெப்பநிலையை குறைப்பதற்காக நீராடுதல் குறிப்பாக காலை அல்லது மாலை வேலைகளில் நீராடுவதன் மூலம் உடல் வெப்பநிலையைக் குறைக்க முடியும்.இதனால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகளையும் தவிர்க்கலாம்.
வெப்பமுள்ள சூழ்நிலையில் சில வேளைகளில் சுவாசத்தொற்று நோய் ஏற்படலாம். ஆகவே, பொது இடங்களுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக தூசுகள் இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவை மிகவும் முக்கியமாகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை