வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் வேட்டைக்குச் சென்ற 12 பேர் கைது ; 8 பேர் தப்பியோட்டம்

வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் வேட்டைக்குச் சென்ற 4 குழுக்களைச் சேர்ந்த 12 பேர் கருவலகஸ்வெவ மற்றும் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 8 பேர் தப்பியோடியதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

வில்பத்து மற்றும் தப்போவ சரணாலயங்களில் தொடர்ந்தும் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடப்பட்டு வருவதாக தெரிவித்த நிலையில், இரண்டு நாட்களாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டபோது நேற்றைய தினம் அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் 16 ரவைகள், 7 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரவைகள்,  வேட்டைக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், 5 தொலைப்பேசிகள், 7 கத்திகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஏனைய பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று  மாலை பிணையில் விடுவித்துள்ளதுடன், புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்